ரணிலின் வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் – 27 சந்தேக நபர்களுக்கு பிணை – ஒருவருக்கு திறந்த பிடியாணை

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கின் 27 பிரதிவாதிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின்போது மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட 30 சந்தேக நபர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பாராளுமன்ற அமர்வு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று அவரது சட்டத்தரணியால் நீதவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான ஊடகவியலாளர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸாரினால்  நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் குறித்த ஊடகவியலாளருக்கு  திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கும் அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் எதிர்வரும் ஏப்ரல்   மாதம் 21ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.