மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் நேற்றைய தினம் (28) 57ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.
குறித்த போராட்டம் மதியம் 1.30 வரை முன்னெடுக்கப்பட்டு போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.