தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றும் போது அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது கணவர் எழிலனை இராணுவத்திடம் நேரடியாக கையளித்து இன்று 15 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கிறேன். கடந்த தேர்களில் மாறி மாறி சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம். ஆனால் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இம்முறை தமிழ் மக்கள் சார்பில் கூட்டாக பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் கொண்டுவரப்பட்டுள்ளார். தமிழர்களுடைய வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
தமக்காக வாழாது எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரகளது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட மக்களது இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர்களின் உரிமைச் சின்னமான சங்கு சின்னத்திற்கு நேராக ஒரே ஒரு புள்ளடியை போட்டு தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
இப்பரப்புரை கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று ஜனாதிபதித்தேர்தலில் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தனர். இதன் போது அப்பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.