மத்திய வங்கி மோசடி மகேந்திரன்மீதும் சட்டம் பாயும் : அமைச்சர் சந்திரசேகர் கருத்து

எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்படும் என நாம் உறுதியளித்திருந்தோம். இதற்காக பொலிஸார் உட்பட பாதுகாப்பு துறையினருக்கு தேவையான வளங்களை வழங்கினோம். அவர்கள் சிறப்பாக தமது கடமைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் சிக்கி, சிறைக்கு சென்றுள்ளனர்;. நீதிமன்றத்தக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்கள்கூட நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் இப்படியான கைதுகள் நடத்தப்படவில்லை எனவும் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

நாட்டில் கடந்த காலங்களில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றபோது, இவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், செவ்வந்தி உள்ளிட்டவர்களை பிடிப்பதற்குகூட தெம்பு இல்லை எனவும் எதிரணிகள் கூச்சலிட்டன. ஆனால் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இன்று நிரூபனமாகி வருகின்றது.

கடந்தகாலங்களில்தான் குற்றவாளிகள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை. தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது.

அதேவேளை, மக்களுடைய சொத்துகளை களவாடியவர்கள், சூறையடித்தவர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்குவார்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் விடயத்திலும் சட்டம் செயல்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.