இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
”யாழ்.பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படுவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரப்பட்டது. பாரிய பிரச்சினையை இதன்மூலம் தோற்றுவிப்பதற்கு முற்பட்டனர். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறு உண்மையற்ற தகவல்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் இராணுவம் வசம் இருந்த – தற்போது இருக்கின்ற காணிகள் உரிய மீளாய்வின் பின்னரே விடுவிக்கப்படுகின்றது. இது விடயத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.” எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.



