38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டு காணிகள் கையளிப்பு

Unknown 3 38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டு காணிகள் கையளிப்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு இராணுவ,முகாம் 38 வருடங்களின் பின் மூடப்பட்டு காணிகள் கட்டடங்கள் கையளிக்கப்பட்டன.

காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம்  வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டு காரைதீவு பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள், காணிகள் உரியவர்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் கல்முனை கட்டளைத்தளபதி அதற்கான உரிய ஆவணங்களை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளரிடம் நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இங்கு நிலைகொண்டிருந்த சுமார் 50 இராணுவத்தினர் கல்முனை இராணுவ முகாமிற்கு இடமாற்றப்பட்டுள்ளனர். காரைதீவு கிராமம் கடந்த 1985, 1988, மற்றும் 1990 களில் பாரிய வன்முறைக்கு இலக்காகி பாரிய அழிவைச் சந்தித்திருந்த பழம்பெரும் தமிழ்க் கிராமமாகும்,

அதனால் 1988 களில் இருந்து அங்கு இராணுவம் , விசேட அதிரடிப்படை , இந்திய அமைதிகாக்கும் படை மற்றும் உளவு பிரிவினர் மாறி, மாறி தொடர்ச்சியாக பயன்படுத்திய இடமாக இந்த முகாம் காணப்பட்டது, நேற்று முன்தினம் பிற்பகலுடன் இந்த இராணுவ முகாம் பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இருந்த பொழுதிலும் தேசிய புலனாய்வு பிரிவினரும் அவர்களுடன் 3 இராணுவத்தினரும் இன்னும் ஒரு வார காலத்திற்கு அங்குள்ள வாசஸ்தலத்தில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகின்றது .

இது தொடர்பாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு ஜி.அருணன் கூறுகையில்..

கரைதீவு இராணுவ முகாம் அகற்றப்படுவது தொடர்பாக கல்முனை பிராந்திய கட்டளை தளபதி எங்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை அழைத்து எங்களிடம் அந்த பத்திரங்களை கையளித்தார் . புலனாய்வு பிரிவினரும் விரைவில் அகன்று விடுவார்கள் என்றும் கூறினார்.

1990 களில் சுற்றி வளைப்புகளில் வீடுகளிலும் , வீதிகளிலும் கைது செய்யப்பட்டவர்கள் வாகனங்களில் போக்குவரத்தின் போது இறக்கி எடுக்கப்பட்டு இந்த காரைதீவு முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பலர் இதுவரை வீடு வந்து சேரவில்லை, இந்த இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதிகளும் சோதனை செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம்.

இந்த முகாமிற்குள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பஸ்சிலும், இராணுவ வாகனத்திலும் ஏற்றிச் சென்று நிந்ந்தவூர் முருகன் ஆலய மண்டபத்தினுள் வைத்து துப்பாக்கியால் சுட்டும் எரித்தும் கொல்லப்பட்ட சுமார் 70 தமிழ் இளைஞர்களது கொலை பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்.