யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம்: வழக்குத்தாக்கல்

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு தீவகத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அச் சமயம், மண்டைதீவில் உயிருடன் பிடிக்கப்பட்ட பொதுமக்களில் பலர் இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணைக் குழுக்களாலும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியில் உள்ள கிணறு உள்ளிட்ட 3 கிணறுகளில் போடப்பட்டு மூடப்பட்டன என்று கூறப்படுகின்றது.

இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடாத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியங்கள் மற்றும் மதகுருமார் சிலரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்றைய தினம் (17.09.2025) புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து. இதனையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொலிஸார் கால அவகாசம் கோரியமையால் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.