குற்றக்குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை!

திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 50% க்கும் மேற்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு இந்தக் குற்றக் குழு பொறுப்பேற்றுள்ளது.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு மாதமும் பணம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “வரி வசூலிப்பது போலவே, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளனர். சில அமைச்சர்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.

குறித்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று ஜனாதிபதி கூறினார்.
குறித்த நபர்கள் நாட்டில் ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.