வடக்கிகு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கியமக்கள்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்டார் மைதானத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனது ஆட்சியில் அவர்களுக்கு 25 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியமாக 57500 ரூபா மாற்றப்படும்.
அத்துடன் வவுனியா பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமபுறமக்களின் வாழ்வாதாரத்தினை எனது அரசு மேம்படுத்தும். பல்துறைகளிலும் அபிவிருத்தியடைந்த இடமாக இதனை மாற்றுவதற்கான நடவடிக்கையினை நிச்சயமாக எடுப்பேன்.
அத்தோடு நாட்டின் வறுமை நிலையினை குறைக்கவேண்டும். சேமிப்பு,முதலீடு,நுகர்வு,உற்பத்தி ஏற்றுமதி இவற்றினை மையப்படுத்தி வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் சுயபொருளாதாரத்தினை வளர்ச்சியடை செய்யவேண்டும். இந்த நிலையான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன்.
கல்வித்துறை சுகாதாரத்துறை,விவசாயத்துறை ஆகியன எனது ஆட்சியில் மேம்படுத்தப்படும். மகாவலி எ வலயம் அபிவிருத்தி செய்யப்படும். விவசாயக்கடன்கள் அனைத்தும் நீக்கப்படும். புதிய உபகரணங்கள் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டு விவசாயத்தில் புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும்.
வவுனியாவில் இளைஞர்களின் தொழில் வாய்ப்பினை கருத்தில்கொண்டு அத்தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். இந்த அரசாங்கத்தினால் ஒரு கடவுச்சீட்டைக் கூட சீராகவழங்கமுடியாதிருக்கின்றது.
இந்த நிலைமையில் அவர்களால் எவ்வாறு தொழிற்சாலைகளை வழங்கமுடியும். தொழிற்சாலைகளை எரித்து அழித்தவர்கள் எவ்வாறு அதனை நிறுவித்தருவார்கள்.
போர் நிறைவுற்ற பின்னர் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்தித்தார்களா? எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை எடுப்பேன். எனவே எதிர்வரும் காலத்தில் அபிவிருத்தி புரட்சியோடு நாம் உங்களைச் சந்திப்போம் என்றார்.