இலங்கையின் மொத்த போதை வலையமைப்பை கட்டுப்படுத்தும் நபர்கள் தொடர்பில் தகவல்!

இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சிறு அளவிலான விற்பனை தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமானது பிரதானமாக ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பிரதி காவல்துறை மாஅதிபர் சந்தன கொடிதுவக்கு இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த ஐந்து போதைப்பொருள் மன்னர்களும் இலங்கை பிரஜைகள் என்றும், தற்போது டுபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த நபர்கள் இலங்கையில் நேரடியாகத் தங்கியிருக்காமல், மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகளைப் பயன்படுத்தித் தங்களது வலையமைப்புகளைத் தூரத்திலிருந்தே நிர்வகித்து வருவதாக நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வலையமைப்புகளை இயக்குவதற்கு அவர்கள் மிகவும் பாதுகாப்பான தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்றும் பிரதி காவல்துறை மாஅதிபர் கூறினார். இந்த நபர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்களுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான தொடர்புகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கொண்டுள்ள இரட்டைக் குடியுரிமை என்பன, அவர்களைச் சட்ட ரீதியான வழிகளில் மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பிரதி காவல்துறை மாஅதிபர் சந்தன கொடிதுவக்கு விளக்கினார்.

உள்ளூர் விநியோகஸ்தர்களின் பெயர்களைப் பொதுமக்கள் அடிக்கடி கேள்விப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் பெரும்பாலும் மறைந்தே இருக்கின்றனர். உள்ளூரில் அடையாளம் காணப்படுபவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்குள் போதைப்பொருளைக் கொண்டு செல்பவர்களாக அல்லது விநியோகிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

ஊடகங்களும் இவ்வாறான கீழ்மட்ட செயற்பாட்டாளர்கள் குறித்தே கவனம் செலுத்துகின்றன.
ஆனால் வலையமைப்பின் பின்னாலுள்ள முக்கிய புள்ளிகள் பற்றி மிகக் குறைந்த கவனமே செலுத்தப்படுகிறது என்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பிரதி காவல்துறை மாஅதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.