முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார்.
பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் மக்களிடையே பெரும் உணர்ச்சி பூர்வமான சூழலை ஏற்படுத்தியது.



