இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாக தான் செயற்பட்டு வருகிறது என்று தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஒரு விடயம் பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது என்று சுட்டிக் காட்டினார். தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சிறிதரனுக்கு எதிராக அவர்களது கட்சிக்குள்ளேயே குழப்ப நிலைமையை ஏற்படுத்திக் கொண்டு அவரை அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலக வேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று அவரை பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியில் இருந்தும் அவரை விலக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். எனவே தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமை முன்னெடுக்கக்கூடிய கட்சியாக இருந்து வந்தது ஆனால் இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாகதான் தற்போது செயற்பட்டு வருவதைக் காணமுடிகின்றது.
விசேடமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து இருந்தாலும் மீண்டும் அவரது அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரோடு சேர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. தற்போது தமிழரசு கட்சி பலவிதமாக சிதைந்துபோய் தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதை மறந்து தங்களுக்கான உரிமையை வென்றெடுப்பதற்காகத்தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது என்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.



