ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்க இலங்கையில் உயர்மட்ட கலந்துரையாடல் !

ஜப்பான் – இலங்கை வர்த்தக சூழல் தொடர்பான மூன்றாவது குழுக் கூட்டம் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி, இலங்கை முதலீட்டு சபையில் (BOI) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (JCCI), இலங்கையில் செயல்படும் ஜப்பான் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மேலும் இலங்கை முதலீட்டு சபை மற்றும் தொடர்புடைய இலங்கை அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இயங்கி வரும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வர்த்தக மற்றும் முதலீட்டு சவால்கள் குறித்து இருதரப்பினரும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற   பொருளாதார கொள்கை கலந்துரையாடலை (Intergovernmental Economic Policy Dialogue) குறிப்பிட்ட ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார பிரிவு தலைவர் ஓஹாஷி கெஞ்சி, இலங்கையில் ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்கும் வழிமுறைகள் மற்றும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்கால ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வர்த்தக சூழலை உருவாக்குவதில் இந்தக் குழுவின் பங்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் இயங்கும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் – இலங்கை பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் இத்தகைய கலந்துரையாடல்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.