வடக்கு, கிழக்கிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுக்கின்றன.

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. அதற்கமைய இன்று வடக்கு, கிழக்கிலுள்ள ஸ்ரீலங்கா சுகாதார சேவைச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சுகவீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.

அதேவேளை இன்று நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர்.

இலங்கை வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையான 75 சேவைப் பிரிவுகளும் இணைந்து போராட்டம் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் இடம்பெறுவதால் மக்கள் வீணான அலைச்சலைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டத்தின்போது அவசர சிகிச்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.