இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘1980களில் வன்முறையால் தப்பி ஓடிய அகதிகளில் பலர், இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியற்றவர்களாகவும் இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாகவும் உள்ளனர். அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் நாடு திரும்ப விரும்பவில்லை.
தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்த தமிழ் அகதிகள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.” என்றார்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில், ‘புதிய அரசாங்கமாக சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன.
இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும்.
இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான பாதிப்புகளை கடந்த காலத்தில் சந்தித்தது. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020-21 இல் கோவிட் தொற்றுநோய், மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை என்பனவே அந்தப் பிரச்சினைகள்.
எமது பொருளாதாரத்தை பலப்படுத்த இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்க உள்ளோம். இதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும்” என்றார்.