தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் காணி விடுவிப்பு விவகாரத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. குறித்த விடயம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டின் பிரதானமாக கருதப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
எல்லை மறுசீரமைப்புகளை இறுதி செய்தல், இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான காணித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாக இடையூறுகளைத் தகர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பிற சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.



