பேரிடரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடுகள் முடிந்த பின்னர் இந்த மாநாடு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், நெடுஞ்சாலைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.
சுமார் ஆறு முதல் ஏழு பில்லியன் டொலர் வரையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மதிப்பிட்டுள்ளார். மறுகட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, அரசாங்கம் ஏற்கனவே ‘Rebuilding Srilanka’ நிதியத்தை நிறுவியுள்ளது.
அந்த நிதியத்திற்கு இதுவரை 3.4 பில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது. பேரிடரின் போது, இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, பிரித்தானியா, மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உதவிகளை வழங்கியிருந்தன.
இந்நிலையில், சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



