மாகாண சபை தேர்தல் தாமதமடைவதற்கு அரசாங்கம் மீண்டும் விளக்கம்

எல்லை நிர்ணயம் செய்து தொகுதிகள் பிரிக்கப்படாத நிலையில் எவ்வாறு மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
“இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன, அதில் அவர்கள் தங்களது திறமையைக் காட்டினார்கள். மாகாண சபைத் தேர்தல் ஒன்று வரவிருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால், அந்த மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது எமது பிரச்சினையினால் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கங்கள் இருந்த மாகாண சபை முறையை இரத்து செய்துவிட்டு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தின.

புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் போது தொகுதி அடிப்படையில் தேர்தலை நடத்தக் கூறினார்கள். அதில் ஒரு பகுதிதான் முடிவடைந்துள்ளது, மறுபகுதி முடிவடையவில்லை என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் செய்து தொகுதிகள் பிரிக்கப்படவில்லை.  இத்தகைய பின்னணியில் எவ்வாறு தேர்தல் நடத்த முடியும் என்று வினவ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.