பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழகத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு உணவு, நிதி உள்ளிட்ட உதவிகளை சட்டபூர்வமாக தமிழக அரசால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை அரசு கடைபிடித்து வந்த தவறான கொள்கைகளால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தியா பல்வேறு கட்டங்களாக இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள்களை கடனுக்கு வழங்கி வரும் போதிலும் அங்கு நிலைமை சீரடையவில்லை.
இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்ட நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்களின் உடமைகளை விட்டு விட்டோ, விற்று விட்டோ தஞ்சம் தேடி தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.