இலங்கை அனர்த்தத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையிடம் நான்கு உலங்கு வானூர்திகள் மட்டுமே பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் இருந்ததாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விமானப்படையின் இந்த மட்டுப்படுத்தப்பட்ட தயார்நிலை காரணமாகவே, மீட்புப் பணிகளுக்காக அரசாங்கம் VIP உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையிடம் இரண்டு Bell 212 மற்றும் இரண்டு MI17 ரக உலங்கு வானூர்திகள் மட்டுமே தயார் நிலையில் இருந்தன.
தேவையான மீட்பு விமானங்கள் இல்லாத நெருக்கடியைச் சமாளிக்கவே மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். கடந்த நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் இராணுவம் செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறிப்பிட்டார்.



