விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இந்த தகவலை மன்றுக்கு தெரியப்படுத்தினர். உள்நாட்டு போரின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாம்கள், வங்கிகள் மற்றும் கட்டடங்களில் இருந்து மீட்கப்பட்ட இந்த தங்கப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் திணைக்களத்திடம் முன்னர் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
தங்கப் பொருட்களின் அளவு மற்றும் எடை உட்பட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் திணைக்களத்திற்கு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு 6,000 தங்கப் பொருட்கள் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்தே அவர்கள் இந்தத் தகவலை முன்வைத்தனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் உள்ளூர்வாசிகளால் தானாக முன்வந்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டன அல்லது அவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டன என்று முன்னர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விடயங்களைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.