எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 லிட்டர் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 775 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 4765 ஆக பதிவாகியுள்ளது.
5.0 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 308 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 1910 ரூபாவாக உயர்ந்துள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 140 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 890 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் லாஃப் நிறுவனத்தின் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1070 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 5700 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஐந்து கிலோ சிலிண்டரின் விலை 418 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 2280 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள மொத்த 661,822 குடும்ப அலகுகளில் 85.5 சதவீதம் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.
அதே வேளையில், கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொத்தக் குடும்பங்களில் 66.9 சதவீதம் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன. களுத்துறை மாவட்டத்தில், மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் 55.9 சதவீதம் பேர் எரிவாயுவை பயன்படுத்துகின்றன.
மொனராகலை மாவட்டத்தில் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வீடுகளின் சதவீதம் மிகக் குறைவாக உள்ளது. அங்கு 15.3 சதவீத வீடுகள் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.
இருப்பினும், நாட்டில் உள்ள வீடுகளில் 55.3 சதவீதம், சமையலுக்கான முக்கிய ஆற்றல் மூலமாக விறகைப் பயன்படுத்துவதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் சமையலுக்கு விறகைப் பயன்படுத்தும் வீடுகளின் சதவீதம் மிக அதிகமாக பதிவாகியுள்ளது. அங்கு 83.6 சதவீத வீடுகளில் விறகை பயன்படுத்துகின்றன.
பதுளை மாவட்டத்தில் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வீடுகளின் சதவீதம் மிக அதிகமாக உள்ளது, அங்கு 80.6 சதவீதம் வீடுகள் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான தரவு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷியாமலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எரிவாயு விலை உயர்வு காரணமாக, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பலவகை உணவுகளின் விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன, எரிவாயு விலை அதிகரித்தாலும் பேக்கரிப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது என்று கூறினார்.
சந்தையில் பேக்கரிப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாகவும், விலைகள் மேலும் உயர்த்தப்பட்டால், பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எரிவாயு விலை உயர்வால் பேக்கரிப் பொருட்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், தற்சமயம் பேக்கரிப் பொருட்களின் விலையை உயர்த்துவதை விட, அந்தச் செலவை பேக்கரி உரிமையாளர்களே ஏற்றுக்கொள்வதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.



