பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்த வர்மன் என்ற அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் (02) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் இட்டதாகக் கூறி அவர் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பேஸ்புக் பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், வவுனியாவில் வசித்து வந்த அவர், போராளிகள் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன், இன்று (02) ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிணை நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.