01. 2009இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங்களை, முன்னைய அரசாங்கங்கள் உரிய முறையில் கையாளவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு மற்றும் அதன் முடிவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
முன்னைய எந்த அரசாங்கமும், தேசியப் பிரச்சினையை முறையாக நிர்வகிக்காமையே, ஜெனீவாவில் நடக்கும் இந்தச் செயல்பாட்டிற்கான அடிப்படைக் காரணமாகும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெடுப்பில் தோல்வியடைவது உறுதி என்று தெரிந்திருந்தும், முன்னைய அரசாங்க உறுப்பினர்கள் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்ததாகவும் வாக்கெடுப்பை கோருவது ஏற்கனவே சர்வதேசமயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையை உள்நாட்டுத் தளத்திற்குக் கொண்டு வந்து தீர்ப்பதற்கான வாய்ப்பை அடைத்து விடுமெனவும் தெரிவித்தார்.
இலங்கை குறித்து மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது முதல் முறை அல்ல. 2009இல் போர் முடிவடைந்த பிறகும், தற்போதைய மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பழைய அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் இலங்கையின் போர் தொடர்பான மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2009லிருந்து மட்டும் பார்த்தால், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் எண்ணிக்கை 11 ஆகும். இந்தத் தீர்மானங்களுக்காக அந்தந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றியுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் அரசாங்கங்கள் தீர்மானங்களுக்கு ஆதரவளித்து அவற்றில் பங்குதாரர்களாகவும் இருந்தன.
வேறு சந்தர்ப்பங்களில், அப்போதைய அரசாங்கங்கள் தீர்மானங்கள் குறித்து வாக்கெடுப்புக்குச் சென்றன.
வேறு சில சமயங்களில், இலங்கை அரசாங்கமே இலங்கை தொடர்பாக தனது சொந்தத் தீர்மானத்தை முன்வைத்தது.
மேலும், அப்போதைய அரசாங்கங்கள் வாக்கெடுப்புக்குச் செல்லாமல், தீர்மானத்தின் சில அத்தியாயங்களை மட்டும் எதிர்த்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையை முறையாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடக்கும் இந்தச் செயல்பாட்டிற்கான அடிப்படைக் காரணமாகும்.
இந்தத் தீர்மானங்கள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கான முக்கிய காரணம் இதுதான்.
போர்ச் சூழ்நிலைகளில் மனித உரிமைப் பிரச்சினைகள் எழும் என்பதை நாம் அறிவோம். ஆனால், பெரும்பாலான நாடுகள் தங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் மனித உரிமைப் பிரச்சினைகளைக் கையாண்டு தீர்த்துக் கொள்கின்றன, மேலும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துகின்றன.
ஆனால், இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள், மனித உரிமைப் பிரச்சினைகளை உள்நாட்டில் தீர்த்து, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, பிரிவினைவாத, இனவாத மற்றும் மதவாத அரசியலில் ஈடுபட்டு, நாட்டைப் பிளவுபடுத்தி, அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகளை மேலும் மீறுவதன் மூலம் இலங்கையை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத நாடாக மாற்றின.
ஜெனீவா தீர்மானத்தின் பரிணாமத்தைப் பார்த்தால் இது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர் முடிந்த உடனேயே ஒரு தேசிய பொறிமுறை மூலம் எளிதாகத் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய இந்த ஜெனீவாப் பிரச்சினை, குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தலைமை காரணமாக சர்வதேசமயமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.
இந்தநிலையில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, சர்வதேசமயமாக்கப்பட்ட மனித உரிமைகள் செயல்முறையை எப்படியாவது தேசியத் தளத்திற்குக் கொண்டு வந்து, வலுவான மற்றும் சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதே தங்களின் குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான பல முக்கியமான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போன்ற ஒரு நாடு வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது சவாலாகும்.
ஐ.நா. பொதுச் சபையில் ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் ஒரு வாக்கு உள்ளது.
ஆனால் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் அப்படியில்லை.
193 ஐ.நா. உறுப்பு நாடுகளில், இந்த பேரவையில் ஒரே நேரத்தில் 47 நாடுகள் மட்டுமே 3 வருட காலத்திற்கு உறுப்பினர்களாக இருக்க முடியும்.
இந்த உறுப்புரிமையும் பிராந்திய அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஐரோப்பா போன்ற சில பிராந்தியக் குழுக்கள் பொதுவாக ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால், மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் ஒரு தீர்மானம் தோற்கடிக்கப்படுவது மிகவும் அரிது. இலங்கையைப் பொறுத்தவரை, நமது நாடு தொடர்பான ஒரு தீர்மானம் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.