குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுப்பு

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் இரண்டாம் நாளாக இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதமன்றில் நேற்று (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாகிய இன்றும் (31) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை. இன்றையதினமும், குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டுள்ளதுடன், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், காவல்துறையினர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற அதிகாரிகள், உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.