யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான முந்தைய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களை கடுமையாக விமர்சித்த அவர், 64,407 வீடுகளை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 1,647 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவற்றில் பல வீடுகள் யானை தாக்கும் இடங்களிலும், தண்ணீர் மற்றும் வீதி வசதிகள் இல்லாத காட்டுப் பகுதிகளிலும் கட்டப்பட்டதால் மக்கள் குடியிருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த முறை பாதீட்டில் வடக்கு கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,445 வீடுகளை நிர்மாணிக்க 3.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வீடொன்றுக்கு தலா 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கில் முந்தைய ஆட்சியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீடுகளை இழந்து, தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கான வீடுகளுக்கு அத்திவாரம் மட்டுமே போடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் 1,900க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை கட்டி முடிக்கும் பணி நிறைவு செய்யப்படும் என்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார்.



