தமிழ் மக்களுடைய தனி நபர் விவசாயக் காணிகள் பங்குபோடப்பட்டு கொண்டிருக்கின்றது தொல்பொருள் திணைக்களம் ,வன இலாக்கா போன்றவையின் அபகரிப்புக்கள் தொடர்கின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மூதூர் பட்டித் திடலில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், ‘அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவதே முக்கியமாக காணப்படுகிறது. தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாக வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், துறை முக அதிகார சபை என மொத்தமாக 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளனர்
எல்லைநிர்ணய ஆணைக்குழு சில பகுதிகளை வேறு பகுதிகளுடன் சேர்த்துள்ளனர். குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுகின்றனர். இதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தனிநபர் காணிகளை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை மீட்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
அபிவிருத்திகளுக்காக அரசோடு இணைய வேண்டும். அதை விடவும் உரிமைகளை பெற முயற்சிப்போம். நாடாளுமன்ற உறுப்பினராகி ஏழு கிழமையாகிறது அதற்குள் ஐந்து கோடி ரூபா செலவில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். கடல் தொழில் பிரச்சினைகளை தீர்க்க 13 இலட்சம் ஒதுக்கியுள்ளேன். இது போன்று உரிமைகளை விட்டுக் கொடுக்காது அபிவிருத்திகளை செய்வேன் .திரியாயில் விகாரைக்காக 3000 க்கும் மேற்பட்ட காணிகளை கபளீகரம் செய்யவுள்ளனர். இதனை தடுத்து வருங்காலத்தில் ஒன்றாய் செயற்படுவோம்’ என்றார்.