அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை குறித்த கட்சிகள் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், குறித்த கட்சிகள் அடுத்த தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவோ அல்லது வேட்பாளர்களை நிறுத்தவோ முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட கட்சி சின்னங்கள், செயலாளர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் திருத்தப்பட்ட பட்டியலின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி , ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய லங்கா மகாசபைக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முற்போக்கு முன்னணி மற்றும் சிங்கள தீப தேசிய முன்னணி ஆகியனவே பொதுச் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவையாகும்.



