போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

WhatsApp Image 2026 01 09 at 15.27.48 2 போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து  மூன்றாவது நாளாக  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் 4 பேர் சுகயீனமுற்ற நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (09) அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த கற்கை நிறுவகத்தில் நான்காம் வருடம் முதலாம் அரையாண்டில்  நடன நாடகத்துறையல் கல்விகற்று வருகின்றனர். இதன் விரிவுரையாளர் ஒழுங்கு முறையாக இரண்டு வகுப்புக்களும் நடைபெறுவதில்லை. மேலும் அவர்  தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன் சில மாணவர்களின் உடலமைப்பை வைத்து கேலி செய்து அவமானப்படுத்துவதுடன் விரிவுரை நேரங்களில் மாணவர்களை சரியான காரணமின்றி வெளியேற்றி விடுகிறார்.

இந்த விடயம் தொடர்பில்  மாணவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறு விரிவுரையாளர் பல நடவடிக்கைளால் மாணவர்கள் ஆகிய நாங்கள் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இவரை மாற்றிதருமாறு கோரி கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடியிடம் கடந்த 04.03.2025 எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை கையளித்து முறையிட்டோம். அவர் அதற்கான இரு வாரங்களில் தீர்வு பெற்றுதருவதாக உறுதியளித்தார்.

இருந்தபோதும் எமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.  அது தொடர்பாக 12.08.2025 அன்று பணிப்பாளரிடம் மீண்டும் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் எமது பிரச்சினையை முன்வைத்திருந்தோம்.

ஆதற்கான தீர்வு கிடைக்காமையினால் மாணவர் ஒன்றியத்தினூடாகவும் கோரிக்கையினை பணிப்பாளர் முனவைக்கப்பட்ட போதிலும் அதற்கான நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கவில்லை என்றனர்.

எனவே குறித்த பாடத்துக்கான பரீட்சகரை நியமிக்க வேண்டாம் என கோரி கடந்த புதன்கிழமை (07)  முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்திருந்து அமைதியான போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து இரவு பகலாக  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போது 4 பேர் மயக்கமடைந்த நிலையிலும் 5 மாணவர்கள் சுகயீனமுற்ற நிலையில் மட்டு போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொட்டும் மழை குளிர் காற்றுக்கு மத்தியில் காரியாலய கட்டிட வெளிபகுதியில் தொடர் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.