இலங்கையில் முக்கிய பிரச்சினையாக மாறும் போதைப் பொருள் பயன்பாடு!

இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன.  சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டாலும், எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.  அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை இல்லாதொழித்து போதைப்பொருட்களை ஒழிப்பதாக உறுதியளித்தது.

அதற்கமைய, விரிவான போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் குற்ற எதிர்ப்பு திட்டத்தை ஆரம்பித்து, 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கண்டறியும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், போதைப்பொருள் குற்றங்களுக்காக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரைக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் மெத்தம்பேட்டமைன் (methamphetamine) பயன்பாடு 2017ஆம் ஆண்டில் முதன்முதலில் பதிவாகியதாகவும், பெரும்பாலான பயனர்கள் 19 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, நாட்டின் தெற்கு கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51 பொதிகளில் சுமார் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருட்களில், 670 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் ஹேஷ் ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.