தொடரும் வைத்தியர்களின் போராட்டம் – கிழக்கு மாகாண நோயாளிகள் பாதிப்பு

​சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதன் காரணமாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும், உயிராபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

சுகாதார அமைச்சின் மந்தகதியிலான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த பிராந்திய ரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று(22) நண்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்திருந்தது. இதனால் இன்று வழமை போல் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வருகை தந்த நோயாளிகள், நாடு தழுவிய ரீதியிலான புதிய போராட்ட அறிவிப்பால் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

தூர இடங்களில் இருந்து அதிகாலை வேளையிலேயே வருகை தந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டு கவலையுடன் வீடு திரும்பினர்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களால் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.