உர விநியோக நிலைவரம் குறித்து : பிரதி அமைச்சர் தகவல்

இலங்கையில் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய நிலையத்தில் உர விநியோக நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,

பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான TSP மற்றும் MOP உர வகைகள் என்பன போதுமான அளவை விட மேலதிகமாகவே நாட்டில் உள்ளன.

கடந்த சிறுபோகத்தில் 13,000 தொன் MOP உரம் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது 38,000 தொன் MOP உரம் கையிருப்பில் உள்ளது.

நிலவிய சிறிய தட்டுப்பாட்டை நீக்க 25,000 தொன் யூரியா உரத்தைக் கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அவை தற்போது விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் ஒரு மூடை உரத்தின் விலை 17,000 ரூபாவாக இருந்த போதிலும், அரசாங்கத்தின் தலையீட்டால் அது 10,200 ரூபாய் எனும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இரண்டு ஹெக்டேயருக்காக வழங்கப்பட்ட 30,000 ரூபாய் உர மானியம், புதிய அரசாங்கத்தின் கீழ் 60,000 ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.