ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பலவருட தாமதங்கள் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
தற்போது செம்மணியில் 140 இற்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அமைப்புகள் சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளன.