மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் சட்டவிரோத மீன்பிடி வலையைப் பயன்படுத்தியதாகக் கூறி, மீனவர் ஒருவரைக் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இரண்டு மணிநேரம் முழங்காலில் இருத்தி அடித்துச் சித்திரவதை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மீனவர் இன்று புதன்கிழமை (08) மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (05) காலை செட்டிபாளையம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நந்தீசன் என்ற மீனவரை, கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினர் கைது செய்தனர். சிவில் உடையில் சென்ற இக்குழுவினர், மீனவரிடமிருந்த சுருக்கு வலையைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, குறித்த மீனவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், கடற்படையினர் அவரைப் பொதுவெளியில் இரண்டு மணிநேரம் முழங்காலில் இருக்க வைத்துத் தாக்கியுள்ளனர். தான் ஒரு நீரிழிவு நோயாளி என்றும், மருந்து உட்கொள்வதற்கு அனுமதிக்குமாறும் அவர் கெஞ்சியபோதும் கடற்படையினர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தன் கணவர் சித்திரவதைக்குள்ளாவதைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தனது கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.
இதைக் கண்ட கடற்படையினர், அந்தப் பெண்ணின் கைபேசியைப் பறித்து அதில் இருந்த பதிவுகளை அழித்ததுடன், அவரை ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும், கைது செய்யப்போவதாக அச்சுறுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த மீனவர் களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
“தன்னை முழங்காலில் வைத்து அவமானப்படுத்தியதை நூற்றுக்கணக்கானோரும் எனது பிள்ளைகளும் பார்த்தனர்.
இதனால் எனது பிள்ளைகள் அவமானத்தில் பாடசாலைக்குச் செல்ல மறுக்கின்றனர். பலர் இந்த வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நிலையில், என்னை மட்டும் கைது செய்து இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். எனக்கு நீதி வேண்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட மீனவர் கண்ணீருடன் தெரிவித்தார்.



