இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சுமார் 73 சிறுவர்கள் அவர்களின் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த சிறுவர்களில் அதிகமானோர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவ்வாறு அப்பகுதியிலிருந்து 21 சிறுவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
இவ்வாறு பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் சிறுவர்களை இலக்கு வைத்து பல மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதோடு, இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



