செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி பாராளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்கு தாம் விளைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன.
இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றன.
பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் தெரிவித்துள்ளார்.
மனித புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம் மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.
ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோர வேண்டும்.
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் தெரிவித்துள்ளார்.