அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகிறது என்று முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (03) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வடக்கு மாகாணத்தில் 65000 ஏக்கர் அரச காணி இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச திணைக்களங்கள் வடக்கு மாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவேபடுகின்றது.
நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர பாடுபடுகின்றார்கள்.
தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.
அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக்காட்டத்தான் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இழந்த தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



