முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபையில் அறிவிப்பு !

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை ( சிறப்புரிமை) நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல,சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, இச்சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு உறுப்புரையுடனும் முரண்படவில்லை என்றும் பாரளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் அங்கீகரிக்கப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

மேலும், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையில் கூறப்பட்ட கட்டாய விதிகளை பின்பற்றி, நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை தொடர்புபடுத்த மனுதாரர் தவறியதால், இந்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் SC/SD/29/2025இனை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.