மட்டக்களப்பு: மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு- ஆபத்தில் பண்ணையாளர்கள்!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பகுதிக்குள் நுழைந்த அத்துமீறிய நில ஆக்கிரமிப்பாளர்களால் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முத்துப்பிள்ளை வேந்தன் என்பவரின் பசு மாட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு குறித்த மாட்டினை இறைச்சிக்காக கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து முறைப்பாடு பதியச் சென்ற பண்ணையாளர்களை காவல்துறையினருக்கு  வகுப்புகள் நடைபெறுவதாக கூறி முறைப்பாட்டை பதிய முடியாது என திருப்பி அனுப்பி உள்ளனர்.

இந் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கந்தசாமி பிரபு உள்ளிட்ட குழுவினர் மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் உள்ள  காவல்துறைப் பொறுப்பதிகாரியைச் சந்தித்து மேய்ச்சல் தரை நிலங்களில் அத்து மீறி காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறிய சில நாட்களிலேயே அங்குள்ள பண்ணையாளரின் மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசின் ஆட்சிக் காலத்திலும் மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களின் மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு, வாள் வெட்டுச் சம்பவங்கள், பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்த நிலையில் தற்போதைய அனுர அரசின் ஆட்சி காலத்திலும் அதே நிலை தொடர்கிறது.

மட்டக்களப்பு எல்லைக்குள் இன்னுமொரு மாவட்டத்தில் இருந்து வந்து சட்ட விரோத காடழிப்பு மற்றும் மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதோடு அந்த பகுதியில் அத்துமீறிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனுர அரசு கோரிக்கை விடுத்தும் அதனை நடைமுறைப்படுத்தாது மீண்டும் மீண்டும் அந்த பகுதியில் உள்ள மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்றால் அதற்கு யார் காரணம்?

காவல்துறையினரை மீறி அந்த பகுதியில் துப்பாகிகளை கொண்டு மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் யார்?

இதனைத் தடுக்க முடியாத நிலையிலா இன்றைய அனுர அரசாங்கமும் உள்ளது என பண்ணையாளர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.