மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு திங்கட்கிழமை (27)  களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன், முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி தொடர்பில் தாமதங்களை உணர்ந்த நீதவான் அவர்கள் இந்த வழக்குடன் தொடர்புடைய பங்காளர்கள் அனைவரும் எதிர்வரும் 17ஆம் திகதி 2.00 மணியளவில் நீதிமன்றுக்கு வருகைதந்து கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு தெளிவான தீர்மானத்தினை எடுப்பதற்காக நீதிவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வழக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனாறுதீன் தெரிவித்தார்.குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.