இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

01. டொலர் பற்றாக்குறை காரணமாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்றிரவு (31) வெளியிடப்பட்டது. இதற்கமைய, பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள், தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்துள்ள இறக்குமதியாளர்கள், அரச நிறுவன விதிகளுக்கு உட்பட்டு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்’ என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அத்துடன் அவ்வாறான வாகனத்தை பதிவு செய்வதற்கான செலவு, காப்பீடு மற்றும் கப்பல் கட்டணம் என்பவற்றில் 45 சதவீதத்தையும் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள 20 சதவீத தீர்வை வரியுடன் அதற்கான 20 சதவீத நிறையிடப்பட்ட வரி அடங்கலான முழு தீர்வை வரியை இறக்குமதியாளர்களுக்கு 30 சதவீதமாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.