கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மேல்மாகாணத்தில் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் மற்றும் வர்த்த நிலையங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை முகாமைத்துவத்துவம் செய்வதால் கழிவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கு போதியளவு இட வசதிகள் குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிபுணத்துவமிக்க உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கழிவு முகாமைத்துவத்திற்குப் பொருத்தமான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூகம் மற்றும் பாடசாலைகள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
அத்துடன், சமூக சக்தி (Praja Shakthi) மற்றும் சுத்தமான இலங்கை (Clean Sri Lanka) போன்ற திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் பல பணிகளை செய்ய முடிகிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து, கழிவு முகாமைத்துவத்தைப் புதியதொரு தொழில்சார் கற்கையாக அறிமுகப்படுத்துவதன் மூலம், கழிவு முகாமைத்துவம் குறித்த சமூகப் புரிதலை ஏற்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் தலைவருமான சந்தன சூரியாரச்சி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


