தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி

எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாரென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்த வரையில் முதன்மைக்கட்சியாக இருந்தாலும் கூட தமிழ் தேசிய கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு தங்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த பொறுப்பினை இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பித்துள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். “கடந்த உள்ளூராட்சிமன்றம், பாராளுமன்ற தேர்தல்களின்போது எதிரும் புதிருமாக நின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.
அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமும் கட்சியின் பொதுச் செயலாளரும் விடுத்த அழைப்பினை தொடர்ந்து இந்த செயற்பாடு இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்த கட்சியும் விடிவு தராது. அவர்களது கட்சிக்குள் தமிழ் மக்களும் ஊடுருவி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு சிங்கள தலைமைகளுக்கு மேலாக செல்லமுடியாது என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர்சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.