2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் வாசிப்பு நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வாய்வழி விடைக்கான வினாக்களுக்கு காலை 9:30 முதல் 10:30 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு நேரத்தில் பிரேரணைக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நீதி அமைச்சு முன்வைத்த 6 சட்டமூலங்கள் மீது விவாதம் நடத்தவும் குழு தீர்மானித்துள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறும்.

அதன் பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு நேரத்தில் பிரேரணைக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

மேலும், எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 5.30 மணிவரை நடைபெறவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.