மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை மத்தியஸ்த வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், சர்வதேச சமுத்திரவியல் சட்டங்களுக்கு அமைவாகவே ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஒப்படைக்கும் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்து சமுத்திரத்தின் ஊடாகப் பயணிக்கும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்களுக்கு இலங்கை விடுக்கும் வழக்கமான நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பினை ஈரானியக் கடற்படை ஏற்றுக்கொண்டிருந்ததது. 10 – 13 வரை அந்த விஜயம் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய, கிழக்கு போர் சூழல் தொடர்பில் இலங்கை மத்தியஸ்த வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றுகின்றது. எந்த வகையிலும் நாம் இந்த போருடன் தொடர்புடைய அரசு அல்ல. அதற்கமைய சர்வதேச சமுத்திரவியல் சட்டங்கள், பிரகடனங்களுக்கமையவே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
தற்போது 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் எமது பொறுப்பிலுள்ளன. ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய அவை அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படும். அதேபோன்று காயமடைந்த 32 பேர் மற்றும் மற்றைய கப்பலிலிருந்து மீட்க்கப்பட்ட 206 முழுமையாக அரசாங்கத்தின் செலவில் பராமறிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தொடர்பிலும் சர்வதேச சமுத்திரவியல் சட்டங்கள், பிரகடனங்களுக்கமையவே அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும். எவ்வாறிருப்பினும் குறித்த ஈரானிய கப்பல் எமது கடற்பிராந்தியத்துக்குள் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை. நாமல் ராஜபக்ஷ போன்றவர்களால் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன.
இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் கப்பல்கள் பங்கேற்றிருந்தன. அந்த வகையில் அதில் பங்கேற்றிருந்த பங்கேற்ற குறித்த 3 ஈரானிய கப்பல்களும், மீண்டும் நாடு திரும்பும் போது இந்து சமுத்திரத்தின் ஊடாக செல்லும் போது மார்ச் 10 – 13க்கு இடையில் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ளவிருந்தன.
இவ்வாறான கடற்படை சார் நிகழ்வுகளின் போது எமது நாட்டைக் கடந்து செல்லும் எந்தவொரு கப்பலுக்கும் நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பை விடுக்க முடியும். ஆனால் அது விசேட அழைப்பாக இருக்காது. அந்த அழைப்பிற்கு ஈரான் கடற்படையும் விருப்பம் தெரிவித்திருந்தது. இதைத் தவிர கப்பல் மீதான தாக்குதல் குறித்து எந்த தரப்பிலிருந்தும், எமக்கு எவ்வித தகவல்களோ முன்னறிவிப்புக்களோ வழங்கப்படவில்லை.
எமது கடல் எல்லையிலிருந்து 9 கடல் மைல் தொலைவில் இரண்டாவது கப்பல் காணப்படுகிறது. குறித்த கப்பலின் இயந்திரத்தில் கோளாரு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கடற்படையினரின் தலையீட்டுடன் அதன் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயந்திரக் கோளாரு சரி செய்யப்பட்ட பின்னர் கப்பல் இலங்கை கடற்படையினரின் பொறுப்பிலெடுக்கப்பட்டு, திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இது குறித்து அமெரிக்காவினால் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. மாறாக இலங்கையின் இறையான்மையை மதிப்பதாகவே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.



