
மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்திற்கு சென்ற உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்திற்குள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.
மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது



