தமிழர் தாயகத்தின் எழுச்சி நிகழ்வாக நாளை திங்கட்கிழமை யாழ் முற்றவெளியில் இடம்பெற இருக்கின்ற எழுகதமிழுக்கு புலம்பெயர் தமிழர்களின் உறுதுணையினை வழங்கும் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
தலைநகர் பரிசின் தமிழர் வர்த்தக மையங்களின் பகுதியான லாசப்பலில் எழுகதமிழ் ஒட்டிகள் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. லண்டன் வெம்பிளி பகுதியிலும் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்றுவதற்கு எழுகதமிழ் ஒரு வாயிலாக அமைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் எழுச்சிக் கோலமாக அமைய இருக்கும் எழுகதமிழுக்கு, 150க்கும் மேற்பட்ட பொதுஅமைப்புக்கள், கட்சிகள், ஆதரவினைத் தெரித்துள்ளதோடு, தமிழக அமைப்புக்களும் கட்சிகளும் தமது தோழமையினை வெளிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.