தமிழ் மக்களுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம்

சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பி புகலிடத்தஞ்சம்கோரிய ஈழத்தமிழ் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியா அரசு பலவந்தமாக நாடுகடத்தியதற்கும், அவர்களை தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருப்பதற்கும் எதிராக இன்று (01) அவுஸ்திரேலியாவின் நகரங்களில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரேதமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

4 மற்றும் 2 வயதுகளை உடைய இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்தை அவுஸ்திரேலியா அரசு கடந்த வெள்ளிக்கிமை பலவந்தமாக நாடுகடத்த முற்பட்டிருந்தது. ஆனால் இறுதிநேரத்தில் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து அவர்களுடன் சென்ற விமானம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியிருந்தது.

ஆனால் அவர்களை அவர்களின் வதிவிடமான குயின்ஸ்லாந்தில் வசிக்கவிடாது இன்று (01) கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளது அவுஸ்திரேலியா அரசு.

அவர்கள் சிறீலங்காவுக்கு அனுப்பப்பட்டால் சிறீலங்கா அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என கிறீன் கட்சியின் தலைவர் றிச்சாட் டி நற்றலி தெரிவித்துள்ளார். அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக வசித்த குயின்ஸ்லாந்து என்ற இடத்தில் வாழும் மக்களிடம் அவர்களுக்கு அதிக ஆதாவு உள்ளது எனவும், அரசின் நடவடிக்கை மிகவும் கொடுமையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் படகில் வந்த அவர்களின் புகலிடத் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் உள்விவகார அமைச்சர் பிற்றர் டற்றன் தெரிவித்துள்ளார்.

புpரியா, நடேசலிங்கம் ஆகியவர்களுடன் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகிய சிறுமிகளுமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த தீவில் தாங்கள் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா வானொலிக்கு கருத்து தெரிவிக்கும்போது பிரியா தெரிவித்துள்ளார். குழந்தைகள் தொடர்ந்து அழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.