நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும், மாகாண சபை முறைமை முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து அரச நிர்வாகமும் ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன, மைத்திரி, ரணில், மஹிந்த ஆகியோர் பயனற்ற அரசியல் கட்டமைப்பையே முன்னெடுத்து செல்வார்கள். ஆகவே இத்தரப்பினர்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் ஊடாக சுயாதீனமாக போட்டியிட தீர்மானித்துள்ளமையினையும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்வைக்கும் கொள்கைத்திட்டங்களை தெளிவுபடுத்துவதற்குமான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நிப்பொன் ஹோட்டலில் இடம் பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் முறைகேடாக அரசியல் நிர்வாகத்தையே கொண்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலையும் முறையற்ற விதத்திலே வெற்றி கொள்ள முனைகின்றார்கள்.இவ்விரு கட்சிகளும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
71 வருட கால பழைமை வாய்ந்த அரசி யல் கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் அரச செயன்முறைகளே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதிக்கட்டமைப்பு அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக செயற்பட்டால் மாத்திரமே நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையும்.
மக்களாணையினை மதிக்கும் கொள்கைத்திட்டங்களே எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும், மாகாண சபை முறைமை முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து அரச நிர்வாகமும் ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச அமைப்புக்கள் தலையீடு காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கமும், நடைமுறையில் உள்ள சட்டங்களுமே வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஆகவே சட்டத்தின் வாயிலாகவே அனைத்தும் இடம் பெறுவதால்நீதித்துறை கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
முறையற்ற அரசியல் நிர்வாக கட்டமைப் புக்களுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் முயற்சிக்கின்றார்கள். இவர்கள் மூவரும் அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் இம்முறை சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.