தமிழ் மக்கள் மீதானா இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு தாயகத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள்
தாயகத்திலே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை ஆற்றிவந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் முல்லைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் உடல் மக்களின் அஞ்சலிக்காக மாங்குளம் புனித அக்கினேஸ் தேவாலயத்தில் வைக்கப் பட்டிருந்தது.
இரங்கல் வழிபாடு இடம்பெற்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அன்னாரின் உடல், நேற்றும் இன்றும் மக்களின் அஞ்சலிக்காக யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது.
இதன்போது அருட்தந்தையின் பூத உடலுக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து மாத்திரமன்றி தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களும் அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அத்துடன் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என மேலும் பலர் அன்னாரின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆன்ம இளைப்பாற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் அடிகளாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை ஜேம்ஸ் பத்திநாதன் குரல் கொடுத்திருந்தார்.